விபத்தில் இறந்தவருக்கு 17 ஆண்டுக்கு பிறகு இழப்பீடு
திருவனந்தபுரம்: 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது, சிக்னல் கம்பம் இடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வேக்கு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் பெரியம்புரம் பகுதியை சேர்ந்தவர் மான் சென். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
1991 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி சென்னை- மங்களூர் எக்ஸ்பிரஸ்சில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
ரயில் எர்ணாகுளம் அருகே வந்தபோது ரயில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் சிக்னல் அவர் மீது உரசியது. இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்தார். பின்னர் உயிரிழந்தார்.
இதற்கு நஷ்ட ஈடு கோரி அவரது தந்தை தாமஸ் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பின்பு ரயில்வே நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மான்சென்னின் பெற்றோருக்கு ரயில்வே ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதில் ரூ 2.25 லட்சத்தை அவர்களது பெயரில் வங்கியில் முதலீடு செய்யவும், மீதி தொகையை காசோலையாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் 2001 ம் ஆண்டிலிருந்து 9 சதவீத வட்டி கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.