ஏற்காட்டில் பெண்கள் ரகசிய பூஜை - பரபரப்பு
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள வெள்ளக்கடை கிராமத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு நடத்திய ரகசிய பூஜையால் பரபரப்பு நிலவியது.
வெள்ளக்கடை கிராமத்தில், பொங்கல் முடிந்த 5வது நாளில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தப் பூஜையில் பெண்கள் நிர்வாணமாக கலந்து கொள்வதாக சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து சில ஆண்டுகளாக தமிழக வருவாய்த்துறை பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களின் முன்னிலையில்தான் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பூஜையின்போது வெள்ளக்கடை கிராமத்தில் ஆண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஊரின் எல்லைக்கு அப்பால் போய் விடுவது வழக்கம்.
இந்த ஆண்டு பூஜை நேற்று வெள்ளக்கடை கிராமத்தில் நடந்தது. இதையொட்டி ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். பின்னர் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூஜை நடத்தப்பட்டது. கேப்பை ரொட்டியை வைத்து பெண்கள் அம்மனை வழிபட்டனர்.
இந்த பூஜையின்போது மண்டல துணை தாசில்தார் தேவிகாராணி, பெண் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜை முழுவதும் வீடியோவில் எடுக்கப்பட்டது.