2007ன் சிறந்த அரசியல் தலைவராக ப.சிதம்பரம் தேர்வு
டெல்லி: 2007ம் ஆண்டின் சிறந்த அரசியல் தலைவராக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிஎன்என்-ஐபின் டிவி தேர்வு செய்துள்ளது.
2007ம் ஆண்டின் சிறந்த அரசியல் தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பை சிஎன்என் ஐபின் டிவி நடத்தியது. இதில் கலந்து கொண்டு அந்த டிவியின் நேயர்கள் வாக்களித்தனர்.
இதில் அதிக வாக்குகள் பெற்ற 6 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், உத்தரகாண்ட் முதல்வர் பி.சி.கந்தூரி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உ.பி. முதல்வர் மாயாவதி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோரே இறுதிச் சுற்றுக்கு வந்தவர்கள்.
இவர்களிலிருந்து ப.சிதம்பரம் சிறந்த அரசியல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதிக அளவிலான வாக்குகள் கிடைத்தது.
நடுத்தர வர்க்கத்து மக்களின் 'டார்லிங்' ஆக ப.சிதம்பரம் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளிடையேயும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக அவரைத் தேர்வு செய்த தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
பொருளாதாரக் கொள்கையோடு அரசியலையும் கலந்து, அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற அரசியல்வாதியாக ப.சிதம்பரம் திகழ்வதாக தேர்வுக்குழு கூறியுள்ளது.
மேலும் சுதந்திர இந்தியாவில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையும் சிதம்பரத்திற்கு மட்டுமே உள்ளது.
அதேபோல மாயாவதிக்கும், மோடிக்கும் கூட பெருவாரியான வாக்குகள் கிடைத்துள்ளன. இருவருக்கும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் தகுதி இருப்பதாக கூறியுள்ள தேர்வுக்குழு, இருவரும் சிறப்பாக செயல்பட்டால் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர் விருதினைப் பெற முடியும் எனவும் அது கூறியுள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரத்திற்கு விருது வழங்கப்பட்டது.
தேர்வுக் குழுவின் தலைவராக சோலிசொரப்ஜி செயல்பட்டார். இக்குழுவில் இன்போசிஸ் இணைத் தலைவர் நந்தன் நிலகேனி, பில்லியர்ட்ஸ் சாம்பியன் கீத் சேத்தி, நடிகர் மோகன்லால், முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.