நடுக்கடலில் தேங்கி நிற்கும் தமிழக முட்டைகள்
நாமக்கல் பிராந்தியத்தில் மொத்தம் 750 கோழிப்பண்ணைகள் உள்ளன. தினசரி 3 கோடிக்கும் மேலான முட்டைகள் இங்கு உற்பத்தியாகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 14 சதவீதத்தை நாமக்கல் பிராந்தியம்தான் பூர்த்தி செய்கிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் 60 லட்சம் முட்டைகள் தினசரி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குத்தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் முட்டைகளுக்கு வளைகுடா நாடுகள் தடை விதித்து விட்டன.
இதன் காரணமாக ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு கப்பல் மூலம் 22 கண்டெய்னர்களில் அனுப்பப்பட்ட முட்டைகளை அந்த நாடுகள் உள்ளே அனுமதிக்காததல் அவை நடுக் கடலில் கப்பல்களில் தேங்கிக் கிடக்கின்றன.
இதுகுறித்து நாமக்கல் வி.கே.எஸ். என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வி.கே.சிவக்குமார் கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட முட்டைகள் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. மேற்கு வங்கத்திற்கும், நாமக்கல்லுக்கும் இடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு உள்ளது என்பது மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தெரியவில்லை.
இந்த நிலை நீடித்தால் முட்டை ஏற்றுமதி பெரும் பாதிப்பையும், நாங்கள் பெரும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டி வரும் என்றார்.
முட்டைகளை 90 நாட்கள் வரைதான் பாதுகாத்து வைக்க முடியும். எனவே இந்த முட்டைகளை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு திருப்பி விடுவது குறித்து முட்டை உற்பத்தியாளர்கள் யோசித்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகள் தவிர கிர்கிஸ்தான், அல்பேனியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அங்கோலா ஆகிய நாடுகளுக்கும் நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதியாகின்றன. இருப்பினும் மத்திய கிழக்கு நாடுகள்தான் முட்டை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன.
ஆனால் தற்போது கிளம்பியுள்ள பறவைக் காய்ச்சல் பீதி முட்டை ஏற்றுமதியாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த பீதி காரணமாக பல நாடுகள் நாமக்கல் முட்டைகளுக்கு தடை விதித்துள்ளதால், முட்டை ஏற்றுமதி 25 சதவீதம் குறையும் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த செல்வராஜ் என்கிற கோழிப்பண்ணை அதிபர் கூறுகையில், நாட்டிலேயே நாமக்கல் பிராந்தியத்தில்தான் கோழிப்பண்ணைகள் சிறந்த முறையில் பரமாரிக்கப்படுகின்றன. அவ்வளவு சீக்கிரம் பறவைக் காய்ச்சல் அண்ட முடியாத அளவுக்கு இங்குள்ள கோழிப்பண்ணைகளில் சுகாதார நிலைகள் சிறப்பாக உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில் நாமக்கல் பிராந்தியத்தில் ஒரு கோழி கூட நோயால் பாதிக்கப்படவில்லை.
அனைத்துக் கோழிப் பண்ணைகளிலும் வழக்கமாகவே, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற பரபரப்பான சமயங்களில் இது அதிகரிக்கப்படும். கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும். எனவே நாமக்கல் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வருவற்கான வாய்ப்பே இல்லை என்றார்.
இதற்கிடையே, பெரும் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் உள்ளூர் சந்தையில் முட்டைளின் விலையை ரூ. 1.60லிருந்து ரூ. 1.30 ஆக உற்பத்தியாளர்கள் குறைத்துள்ளனர். இது 1 ரூபாயாக குறையும் வாய்ப்பும் உள்ளதாம்.
கடந்த 5 நாட்களில் மட்டும் வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் 5 கோடிக்கும் மேற்பட்ட முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் வரலாறு காணாத இந்த விலை சரிவை பண்ணை உரிமையாளர்கள் சந்தித்துள்ளனர்.
மேலும் தமிழகத்திலிருந்து முட்டை கொள்முதல் செய்வதை பல மாநிலங்களும் நிறுத்தி வைத்துள்ளதால் நஷ்டம் மேலும் அதிகரித்துள்ளது.