வயதுக்கு வராத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
கரூர்: அரவக்குறிச்சி அருகே வயதுக்கு வராத ஏக்கத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மலைக்கோவிலூரை சேர்ந்த சிவமணியின் மகள் ஜானகி(23). வயது 23 ஆகியும் ஜானகி இன்னும் பருவத்தை எட்டவில்லை. இதனால் இவரது திருமணம் தள்ளிப் போனது. தனது தோழிகள் பலருக்கு திருமணம் ஆன நிலையில், தனக்கு மட்டும் திருமணம் தள்ளிப் போவதை நினைத்து மனம் வேதனைப்பட்டார் ஜானகி.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜானகி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
ஜானகியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்த தற்கொலை குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.