ஷார்ஜாவில் கேரள தொழிலாளர் மாயம்
துபாய்: ஷார்ஜாவில் வேலை பார்த்து வரும் 40 வயது இந்தியத் தொழிலாளர் ஜனவரி 15ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜப்பார். இவர் ஷார்ஜாவில் உள்ள மாடர்ன் ரெப்ரஷ்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். ஜனவரி 15ம் தேதி வேலைக்குப் போனவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவருடன் வேலை பார்க்கும் சபீர் என்பவர் கூறுகையில், ஜனவரி 15ம் தேதி காலை 7.30 மணிக்கு ஜப்பார் வேலைக்கு வந்தார். சிறிது நேரம் அலுவலகத்தில் இருந்த அவர் பின்னர் தனது பணி நிமித்தம் வெளியில் சென்றார்.
பின்னர் மாலை 4.30 மணிக்கு மீண்டும் திரும்பி வந்தார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்ட பின்னர் தனது கம்ப்யூட்டரை ஆப் செய்து விட்டு கிளம்பினார்.
இரவு 10 மணியளவில் அடுத்த நாள் வேலை தொடர்பான சில தகவல்களை தெரிவிப்பதற்காக அவரது செல்போனைத் தொடர்பு கொண்டேன். ஆனால் அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் பத்தரை மணிக்குத் தொடர்பு கொண்டபோதும் என்னால் பேச முடியவில்லை.
வெள்ளிக்கிழமை நானும், ஜப்பாரின் மைத்துனர் தேஜாஸ் இருவரும் நுவாமியா காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். எங்களது நிறுவனமும் போலீஸாருடன் தொடர்பு கொண்டுள்ளது என்றார்.
ஜப்பார் குறித்த தகவல் தெரிந்தால் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.