போலி பாஸ்போர்ட்-கருணாவுக்கு 2 ஆண்டு சிறை?
லண்டன்: விடுதலைப் புலிகளின் அதிருப்தி பிரிவு தலைவர் கருணா மீதான போலி பாஸ்போர்ட் வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது புதிய வழக்கை தொடர இங்கிலாந்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று போட்டிக் குழுவை உருவாக்கிய கருணா, இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து வந்தார். கருணாவின் உதவியால்தான் கிழக்கில் உள்ள சில பகுதிகளை ராணுவம், புலிகள் வசமிருந்து மீட்டதாக கூறப்பட்டது.
இந் நிலையில் கடந்த ஆண்டு கருணா, இலங்கையிலிருந்து தப்பி லண்டன் சென்றார். போலி பாஸ்போர்ட் மூலம் அவர் லண்டன் சென்றார். அவரை கடந்த ஆண்டு இறுதியில், இங்கிலாந்து போலீஸார் கைது செய்தனர்.
அவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உட்ஸ்பிரிட்ஜ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது தனது குற்றத்தை கருணா ஒப்புக் கொண்டார்.
அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என இலங்கை குடியேற்றத் துறை அதிகாரிகள் சார்பில் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து வருகிற 25ம் தேதி கருணாவுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
அவருக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் அபராதமும் விதிக்கப்படும்.
இதுதவிர இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா இருந்தபோதும், அதன் பின்னர் பிரிந்து வந்த பிறகும், சிறார் வீரர்களை உருவாக்கியது, மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக தனியாக அவர் மீது புதிய வழக்குகளைத் தொடர இங்கிலாந்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே கருணாவை இப்போதைக்கு இலங்கைக்கு இங்கிலாந்து நாடு கடத்தாது என்று தெரிகிறது.