தைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை - மலேசிய பிரதமர் அறிவிப்பு
மலேசியாவில் பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழர்களுக்கும், மலேசிய அரசுக்கும் இடையிலான திடீர் கசப்புணர்வைக் களையும் முயற்சியில் பிரதமர் படாவியும், ஆளுங்கூட்டணியில் இடம் பெற்றுள்ள மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக நீண்ட காலமாக தமிழர்கள் கோரி வந்த, தைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை என்ற கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. தைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை விடுவது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாக பிரதமர் படாவி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று கோலாலம்பூரில், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியின் இறுதியில் பிரதமர் படாவி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தைப்பூசத் திருநாளுக்கு தேசிய விடுமுறை விடப்பட வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய விடுமுறையாக தைப்பூசத்தை அறிவிக்கிறேன்.
தைப்பூசத் திருவிழாவை தமிழர்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் கோலாலம்பூர் நகர சாலைகள் குறுகிப் போய் விடுகின்றன. அந்த அளவுக்கு பெரும் கூட்டம் கூடி விடுகிறது.
தமிழர்களிடையே நிலவும் வறுமை, ஏழ்மையைப் போக்க உறுதியுடன் பாடுபடுவேன். தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து இனத்தவரிடையேயும் நிலவும் ஏழ்மையை 2010ம் ஆண்டுக்குள் போக்க பாடுபடுவேன். எந்த இனமும் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது.
தமிழர்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு இனத்திலும் ஏழ்மை உள்ளது. அதைப் போக்க வேண்டியது அனைவரின் கடமையும் ஆகும் என்றார் படாவி.
படாவியின் நடவடிக்கை தமிழர்களிடையே அவருக்கு மறுபடியும் ஆதரவை அதிகரிக்க உதவும் என்று அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.