புலிகளுக்கு உதவும் சிங்களர்கள்!
கொழும்பு: பணம் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு சிங்களர்கள் சிலர் உதவி வருவதாக இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே கூறியுள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்து வருகிறது. தினசரி குறைந்தது 30-40 பேர் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தென் பகுதியில் பல்வேறு தொடர் குண்டுவெடிப்புகள் நடந்து வருகின்றன. இதில் பலர் பலியாகி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு சிங்களர்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்து வருவதாக பிரமதர் விக்கிரமநாயகே குற்றம் சாட்டியுள்ளார்.
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு அருகே உள்ள ஹொரனா என்ற இடத்தில் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் மத்தியில் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு சிங்களர்கள் சிலரே நாட்டைக் காட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது கடும் கண்டனத்துக்குரியது. புலிகளுக்கு உதவியாக இருக்கும் சிங்களர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக தங்களது தேச துரோக செயலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் வடக்கில் வசிக்கும் தமிழர்கள், சிங்களர்களுக்கு எதிரிகள் இல்லை, நண்பர்கள்தான். அவர்களும் விடுதலைப் புலிகளால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காகத்தான் ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது என்றார் விக்கிரமநாயகே.