காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய 'நவீன அண்ணன் ' கைது
நாமக்கல்: நாமக்கல் அருகே காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய நவீன அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷீலா கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் ஷீலாவுக்கு அண்ணன் முறை உறவினர் ஆவார்.
தங்கை முறை உள்ள ஷீலாவை ஆறுமுகம் ஷீலாவை காதலிக்க தொடங்கினார். ஷீலா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்வது என ரகளை செய்துள்ளார்.
ஆனால் ஷீலா இதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் திடீரென்று ஷீலாவிடம் தனது காதலை ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷீலா ஆறுமுகத்தின் காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ஷீலா வீட்டில் குளிக்கும் போது மறைந்திருந்து அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் ஷீலாவின் உடல், முகம் மீது ஆசிட் பட்டதால் அவரது முகம் மற்றும் கழுத்து பகுதி வெந்தது. பின்னர் அவரை உறவினர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து மங்களபுரம் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த தங்கையின் அண்ணன் ஆசிட் வீசிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.