ரூ. 1 லட்சம் மோசடி: மதபோதகர்-மனைவி தலைமறைவு
பாவூர்சத்திரம்: வாலிபரின் நோயை குணப்படுத்துவதாக கூறி அவரது பெற்றோரிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான மதபோதகர் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூரை சேர்ந்த சுப்பிரமணியன்-ராஜபொன்னம்மாள் தம்பதியின் மகன் முருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் காலில் புண் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
இதற்கிடையில் இவர்கள் வீட்டு அருகில் வசித்து வந்த மத போதகர் ஜெயராஜ் நெல்லையில் எனக்கு தெரிந்த பிரபல டாக்டர் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் காட்டினால் நோய் குணமாகும் என்றும் பணம் அதிகம் செலவாகும் என்றும் கூறினார்.
அவரின் பேச்சை நம்பிய முருகனின் பெற்றோர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 130 கிராம் தங்கச் செயின் மற்றும் ரூ.1,000 பணத்தையும் கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு ஜெயராஜ் தனது மனைவியுடன், சுப்பிரமணியன் குடும்பத்தினரை நெல்லைக்கு அழைத்து வந்தார். நெல்லை ஜங்ஷனில் உள்ள ஒரு கோவிலில் உட்கார வைத்துவிட்டு நகையை அடகுவைத்து பணத்தை வாங்கி வருவதாக சென்ற ஜெயராஜூம், அவரது மனைவியும் திரும்பி வராமல் தலைமறைவாகி விட்டனர்.
நகையுடன் தலைமறைவான மதபோதகர் தம்பதியினரை சுப்பிரமணியன் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரைப் பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் சுப்பிரமணியன் குடும்பத்தினர் நெல்லை டிஐஜி கண்ணப்பனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தும்படி பாவூர்சத்திரம் போலீசுககு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரணை நடத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக உள்ள மதபோதகர் தம்பதியினரை தேடி வருகிறார்.