அமைதிப் பாதைக்கு திரும்ப பின் லேடனுக்கு மகன் கோரிக்கை
கெய்ரோ: தீவிரவாதப் பாதையிலிருந்து விலகி அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு தனது தந்தை பின் லேடனுக்கு அவரது மகன் ஒமர் பின் லேடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகை உலுக்கி வரும் அல் கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடன் என்ன ஆனார், எங்கு இருக்கிறார், இருக்கிறாரா, இல்லையா என்பது பெரும் குழப்பமாக இருந்து வரும் நிலையில், தீவிரவாதத்தை விட்டு விடுமாறு அவருக்கு அவரது மகன் ஒமர் பின்லேடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வன்முறைகளுக்கு முடிவு வர வேண்டும். இதனால்தான் நான் பகிரங்கமாக எனது தந்தைக்கு இந்தக் கோரிக்கையை விடுக்கிறேன்.
எனது தந்தையாலும், அவரைப் பின்பற்றி வருபவர்களாலும் எண்ணற்ற அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. உலகம் முழுவதும் தீவிரவாதத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காத அளவுக்கு உள்ளது.
எனது தந்தைக்கு நான் கூறிக் கொள்வதெல்லாம், உங்களது இலக்கை அடைய தீவிரவாதப் பாதையை விட்டு விட்டு வேறு பாதையைத் தேர்வு செய்யுங்கள். குண்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றை விட்டு விடுங்கள். அவை யாருக்கும் நன்மை பயப்பதில்லை. அமைதிப் பாதையை தேர்வு செய்யுங்கள்.
இந்தக் கோரிக்கையை நானாக விடுக்கவில்லை. என்னைப் போல அமைதியை விரும்பும் எண்ணற்ற இஸ்லாமியர்களின் விருப்பமும் இதுதான். நீங்கள் பாதை மாற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லீம்கள் விரும்புகிறார்கள்.
2000மாவது ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா பயிற்சி முகாமிலிருந்து நான் வெளியேறினேன். எனது தந்தை என்னை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அதன் பின்னர் எனது தந்தையுடன் நான் பேசவில்லை.
அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. ஆனால் அவரை எளிதில் யாராலும் பிடிக்க முடியாது என்று மட்டும் நம்புகிறேன். காரணம், உள்ளூர் மக்களின் பெரும் ஆதரவுடன் அவர் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்றார் ஒமர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான பெலிக்ஸ் என்ற பெண்மணியை மணந்து கொண்ட ஒமர் (அவருக்கு வயது 26தான் என்பது குறிப்பிடத்தக்கது) தற்போது கெய்ரோவில் வசித்து வருகிறார்.
அவர் மூலம் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது ஒமரும், அவரது மனைவியும் சேர்ந்து அமைதிக்கான இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.