ஜெ தவறுகளை திருத்துவதே திமுகவின் வேலை-கருணாநிதி
சென்னை: அதிமுக ஆட்சியின் தவறுகளை திருத்துவதையே வழக்கமாக கொண்டிருக்கிறது திமுக அரசு என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என அறிவிக்க வேண்டுமென்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளாரே.
பதில்: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை திமுக ஆட்சிக் காலத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றினார்.
அதை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டுமென்று ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் கோரிக்கை வைத்தபோது அது ஏற்கப்படவில்லை.
1998ம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றளவில் 2001ம் ஆண்டு திமுக ஆட்சியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை என்பதை 5 ஆண்டுகள் என மாற்றினார்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற அடிப்படையிலாவது 2003ம் ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் அன்றோ அந்த ஒப்பந்தம் 2003ம் ஆண்டும் நிறைவேற்றப்படாமல் 2005ம் ஆண்டில் தான் முடிவு செய்யப்பட்டது.
2003ம் ஆண்டுக்கான ஒப்பந்தம் என்பதால் அதிமுக ஆட்சிக் கொண்டு வந்த திருத்தத்தின்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 2008ல் தான் நடைபெற வேண்டும்.
ஆனால், திமுக ஆட்சி 2006ல் பொறுப்பேற்றவுடன் ஊதிய ஒப்பந்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பேச்சுவார்த்தையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மீண்டும் மாற்ற வேண்டுமென்று அனைத்து தொழிற்சங்கங்களும் அரசிடம் முறையீடு வைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று பெரும்பாலான தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டது.
தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டு 4 ஆண்டுகள் முடிகின்ற நிலையில் மீண்டும் இந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெறுகிறபோது கடந்த ஆண்டே 3 ஆண்டுகள் என்பது முடிந்துவிட்ட நிலையில், தற்போது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று கேட்பது எப்படி சரியாக இருக்கும்.
இந்த கோரிக்கையை கடந்த ஆண்டே வைத்திருந்தால் அப்போதே பேச்சுவார்த்தை நடைபெற்றிக்கும். எப்படியோ அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை திருத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிற திமுக அரசு இந்த கோரிக்கையிலும் தயக்கம் காட்டாது என உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.