தஸ்லிமா விசா மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
கொல்கத்தா: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொல்கத்தாவில் தங்கியிருந்த தஸ்லிமாவை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார். ராஜஸ்தான் சென்ற அவரை ராஜஸ்தான் அரசு டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
தற்போது டெல்லியில், மத்திய அரசின் பாதுகாப்புடன், ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் தஸ்லிமா. தன்னை மத்திய அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக தஸ்லிமா கூறியுள்ளார்.
இந்த நிலையில், தஸ்லிமாவுக்கு மேலும் 6 மாதங்களுக்கு விசா நீட்டிக்கபப்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 17ம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை தஸ்லிமாவே வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது விசா மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.
எனது விசாவை நீட்டித்தற்காக நான் இந்திய அரசுக்கு கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவை எனது சொந்த நாடாகத்தான் நான் கருதுகிறேன்.
ரகசிய இடத்தில் நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன். விரைவில் கொல்கத்தா விரும்புகிறேன்.
வீடடுக் காவல் விரைவில் முடிய நான் விரும்புகிறேன். கொல்கத்தாதான் எனது நகரம். அங்கு திரும்பவே நான் விரும்புகிறேன்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி நான் ரகசிய இடத்தில் இருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை மட்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார் தஸ்லிமா.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தஸ்லிமாவின் விசா நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.