மாயமான மாணவி காதலருடன் போலீஸில் தஞ்சம்!
சென்னை: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சென்னையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி தனது காதலருடன் சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் முடிச்சூரை சேர்ந்தவர் நமீதா (19). இவர் சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னைக்கு வந்த நமீதா, கடந்த 19ம் தேதி வீட்டு முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் திடீரென அவரைக் காணவில்லை.
இதையடுத்து நமீதா படிக்கும் கல்லூரி கேன்டீனில் வேலை பார்க்கும் செந்தில்குமார் (22) தான் மகளைக் கடத்தி சென்றதாக போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீஸார் இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நமீதாவும், செந்தில்குமாரும் திருமணம் செய்த கோலத்துடன், புதுமணத் தம்பதியாக சேலம் மாநகர காவல்துறை ஆணையர் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
ஆணையர் கோபாலகிருஷ்ணன் இவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் நமீதாவின் தந்தை நடராஜன் வரவழைக்கப்பட்டார். ஆணையரிடம் கண்ணீர் விட்டுக் கதறி அழுத நடராஜன், தனது மகளை கட்டாயப்படுத்தி செந்தில்குமார் கடத்தி சென்றதாகவும், மகளை செந்தில்குமாரிடம் இருந்து மீட்டு ஒப்படைக்குமாறும் கெஞ்சினார். அவரது மனைவியும் அழுதபடி இருந்தார்.
ஆனால் நமீதாவோ, காதலர் செந்தில்குமாருடன் தான் செல்வேன். பெற்றோரிடம் செல்லமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார்.
இதையடுத்து சேலம் போலீசார் இதுகுறித்து நமீதாவிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினர். நமீதா மேஜர் என்பதால் அவரது விருப்பத்திற்கு மாறாக நடக்க முடியாது என்று நமீதாவின் பெற்றோரிடம் கூறிய போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.