விமானம், விமான நிலையத்தில் கலாட்டா-பயணி கைது
சென்னை: பஹ்ரைன் விமானத்தில் வந்த பயணி குடிபோதையில் சக பயணிகளிடம் கலாட்டாவில் ஈடுபட்டார். சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் குடியேற்றத்துறை பெண் அதிகாரியிடம் முறைகேடாக நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சென்னையைச் சேர்ந்த தங்கதுரை (29) என்பவர் பஹ்ரைனில் கூலித் தொழிலாளியாக உள்ளார். நல்ல போதையில் கல்ப் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய இவர் பயணிகளிடம் கலாட்டா செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து பயணிகள் ஒன்று சேர்ந்து அடிக்க முயலவே அமைதியாகியுள்ளார்.
ஆனால், விமானம் தரையிறங்கியதும் குடியேற்றத்துறையினரிடம் கலாட்டா செய்தார். ஹேமாவதி என்ற பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றார்.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர் மீது குடித்துவிட்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.