உ.பி. குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாத தலைவர் சுட்டுக் கொலை
ஜம்மு: உ.பி.யில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்ட ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி (ஹூஜி) அமைப்பின் முக்கிய கமாண்டரான பஷீர் அகமது எனப்படும் சபாவை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.
உ.ரபி. மாநிலத்தில் கடந்த ஆண்டு நீதிமன்றங்கங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு சபாதான் திட்டமிட்டுக் கொடுத்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சபாவுக்கு வலை விரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் சபாவை 11வது தேசிய துப்பாக்கிப் படை பிரிவு மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தகவலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் கோஸ்வாமி உறுதி செய்துள்ளார்.
சபா சுட்டுக் கொல்லப்பட்டது மிகப் பெரிய சாதனை என கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.