வங்கிகள் வேலை நிறுத்தம்-வாடிக்கையாளர்களுக்கு கடும் பாதிப்பு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று பொதுத்துறை வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இன்று மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் வங்கிப் பணிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளின் 9 சங்க ஊழியர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தம் இது முழு அளவில் இருந்தது.
தமிழகத்திலும் வேலை நிறுத்தம் முழுமையாக இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள 5,300 பொதுத்துறை வங்கிகளின் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இதனால் காசோலை பரிமாற்றம், பணம் எடுப்பது, போடுவது ஆகிய பணிகள் அடியோடு தடைபட்டன. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் மொத்த வியாபார பரிமாற்றம் போன்றவையும் பாதிக்கப்பட்டன.
பல ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லாததால் அவற்றின் மூலமும் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுத்துறை வங்கிகளுடன் பழைய தனியார் வங்கிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
லட்சுமி விலாஸ், கரூர் வைஸ்யா, பெடரல் வங்கி, கர்நாடகா வங்கி, கத்தோலிக்க சிரியன், சவுத் இந்தியன் வங்கி, ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் இன்று செயல்படவில்லை.
வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் மட்டும் அதிகாரிகள், கிளை மேலாளர்கள், ஊழியர்கள் என 70,000 பேர் ஈடுபட்டனர். ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி. உள்ளிட்ட சில வங்கிகள் மட்டுமே செயல்பட்டன. இவற்றுக்கு தொழிற்சங்கங்கள் இல்லாத காரணத்தால் இவை இயங்கின.
சென்னையில், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாளை குடியரசு தினம், நாளை மறு நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகளின் சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அடுத்த மாதம் 2 நாள் போராட்டம்
இன்றைய போராட்டத்திற்குப் பலன் கிடைக்காவிட்டால், அடுத்த மாதம் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன.