3வது அணிக்கு சாத்தியம் இல்லை-தா.பாண்டியன்
சேலம்: மத்தியில் 3வது அணி அமைவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது. அதில் தா.பாண்டியன் பேசியதாவது,
இந்தியா வெளியுறவு கொள்கையை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது. யுரேனியம் வாங்குவதற்காக பாதுகாப்பையும் விட்டு கொடுத்துள்ளது. சென்குப்தா குழு மற்றும் டாக்டர் பட் நாயக் அறிக்கை இந்தியாவில் 70 கோடி மக்கள் தினசரி ரூ.20 சம்பளத்திற்கு உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் விலைவாசி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்பு தான் உயரும். ஆனால் தற்போது அதற்கு முன்பே உயர்ந்துள்ளது.
மத வாத கட்சிகள் ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி உருவாகும் சூழ்நிலை தற்போது இல்லை.
கம்யூனிஸ்ட கட்சியின் 2008ம் ஆண்டு முழக்கம் குடும்பத்திற்கு பட்டாவுடன் கூடிய வீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் என்றார்.