காங்கிரஸில் சேரும் 8 மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள்
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 8 முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர முடிவு செய்துள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதலால் அக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தற்போது மதச்சார்பற்ற ஜனதாதளம் கரையத் தொடங்கியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளனர்.
இந்த வரிசையில் 8 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்று காங்கிரஸில் இணைகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரத்விராஜ் சவுகான் முன்னிலையில் எச்.சி. மாதவப்பா, பி.ஆர்.பாட்டீல், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
கெளடாவுக்கு எதிராக முனைப்புடன் செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சிக்கு வருகிறாராம்.