பொய் வழக்கு திமுக-அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்
சென்னை: பொய் வழக்கு தொடர்பாக சட்டசபையில் இன்று திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பொய் வழக்கு தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார மோதல் ஏற்பட்டது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): இந்த அரசு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பொதுவாக பொய் வழக்கு போடுகிறார்கள் என்று ஆதாரமின்றி பேசக்கூடாது. உண்மையிலேயே பொய் வழக்கு என்றால் இன்றைய முதல்வர் கருணாநிதி மீது கடந்த ஆட்சியாளர்கள் போட்டது தான் பொய் வழக்கு. இறுதி வரையிலும் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்று முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கூட பதிவு செய்யப்படவில்லை. இப்போது உறுப்பினர் ஆதாரத்தோடு சொன்னால், அதற்கு அரசு பதில் அளிக்கும்.
கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக): எங்கள் கட்சி எம்எல்ஏ திருத்தணி அரி, நெசவாளர்களுக்காக ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தார். அவர் சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பார் என்று சொல்லி போலீசார் முதல் நாள் இரவே அவரை கைது செய்து பொய் வழக்கு போட்டுள்ளனர்.
ஆற்காடு வீராசாமி: எந்த கட்சியாக இருந்தாலும் போராட்ட அறிவிப்பு செய்தால் அவர் மூலம் ஏதாவது வன்முறை நடக்கும் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தால் முன்னெச்சரிக்கையாக கைது செய்து வழக்கு போடுவார்கள். இது பொய் வழக்கு அல்ல. உங்கள் ஆட்சியிலும் நாங்கள் போராட்டம் அறிவித்த போது எங்களை கைது செய்து இருக்கிறார்கள்.
கே.ஏ.செங்கோட்டையன்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பல பொய் வழக்குகளை நீங்கள் போட்டுள்ளீர்கள். அவர் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று வந்திருக்கிறார்.
அமைச்சர் துரைமுருகன்: முன்னெச்சரிக்கை கைது என்பது வேறு; பொய் வழக்கு என்பது வேறு. உண்மையிலேயே நீங்கள் போட்ட பொய் வழக்கு என்பது எங்கள் தலைவர் கருணாநிதி மீது போட்டது தான். அவரை கைது செய்து ரிமாண்ட் செய்தும் கூட உங்கள் ஆட்சி இருக்கும் வரை அவர் மீது குற்றச்சாட்டு ஏதும் சொல்ல முடியவில்லையே அதுதான் பொய் வழக்கு.
ஆற்காடு வீராசாமி: ஜெயலலிதா மீது பொய் வழக்கு போடப்பட்டு, அதனை விடுதலை செய்ததாக செங்கோட்டையன் கூறினார். யார் மீதும் நாங்கள் பொய் வழக்கு போடவில்லை.
ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கியதாக ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த நிலத்தை அரசாங்கத்திடம் திரும்ப தந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பு எதுவும் சொல்லப்படவில்லை.
அமைச்சர் பொன்முடி: எதிர்கட்சியினர் மீது மட்டுமன்றி, ஆளுங்கட்சியினர் மீதே வழக்கு போட்டது அதிமுகதான். செரீனா மீது கஞ்சா வழக்கு, வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கஞ்சா வழக்கு, தூத்துக்குடி அதிமுக எம்எல்ஏ மீதே பொய் வழக்கு இப்படி உங்கள் கட்சியினர் மீதே வழக்கு போட்டது நீங்கள்தான்.
அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுத்து உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசமாக பேசினார்.
துரைமுருகன்: அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அவர் நடந்து கொண்ட முறைக்காக வழக்கு தொடுத்தார்களே அதுதான் உண்மையான வழக்கு.
செங்கோட்டையன்: பொள்ளாச்சி ஜெயராமன் மீது போடப்பட்டது உண்மையான வழக்கு அல்ல; அவர் மீது போடப்பட்டது வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு. அவர் மீது மட்டுமல்ல 48 பேர் மீதும் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு ஜாதியை சொல்லி திட்டியதாக வழக்கு போட்டிருக்கிறார்கள். இதைவிட பொய் வழக்கு இந்த ஆட்சியில் வேறெதுவும் இல்லை.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): கடந்த ஆட்சியில் இப்போது உள்ள சில அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்றது. நீங்கள் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி குற்றமற்றவர்கள் என்று நிரூபித்திருக்கலாம். ஆனால் கொல்லைப்புற வழியாக அந்த வழக்குகளை வாபஸ் பெற்றீர்கள்.
இவ்வாறு அவர் கூறியதும், அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, தன் மீதும் துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகியோர் மீதும் தொடரப்பட்ட வழக்குகளை ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்ததாகவும், அரசு எந்த வழக்குகளையும் வாபஸ் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
இதேபோல அமைச்சர் கே.என்.நேருவும் எழுந்து, தன் மீது போடப்பட்ட வழக்குகளை கூட ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுவித்ததாக கூறினார்.