வங்கி ஸ்டிரைக்: டாஸ்மாக் கடைகளின் கோடிக்கணக்கான ரூபாய் தேக்கம்
நாகர்கோவில்: வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக டாஸ்மக் மதுபான கடைகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய் தேக்கமடைந்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கடந்த 25ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அடுத்த இரண்டு நாள்கள் (குடியரசு தினம், ஞாயிறு) விடுமுறை என்பதால் 3 நாட்களாக வங்கி பணிகள் அனைத்தும் அடியோடு முடங்கி போயின.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏடிஎம்மில் பணமும் காலியானது.
இவை ஒருபுறம் இருக்க டாஸ்மாக் மதுபான கடைகளில் வசூலாகும் தொகை தேக்கமடைந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் தினமும் வசூலாகும் தொகையை கடைகளின் சூப்பர்வைசர்கள் மறுநாள் காலை வங்கியில் செலுத்தி ரசீது பெற வேண்டும்.
முதல் நாள் நடந்த விற்பனை குறித்து இரவு 8 மணி வரை வரவு வைக்கப்பட்டு மறுநாள் காலையில் வங்கியில் செலுத்தப்படும். இந்த நிலையில், வங்கிப் பணிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கியதால் சூப்பர்வைசர்களே தங்களது கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் பணத்தை வங்கியில் கட்ட முடியாமல் ஊழியர்களே வைத்திருந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வங்கியில் செலுத்தப்படாமல் தேங்கியது. இன்று முதல் அப்பணத்தை வங்கியில் ஊழியர்கள் கட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ஒரு லட்சத்துக்கு மேல் வசூலாகும் கடைகளில் உள்ள பணத்தை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் கொண்டு செலுத்த வேண்டும். அவற்றை வங்கி திறந்த பின்னர் மீண்டும் காலை பெற்று சென்று வங்கியில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் செலுத்தும் பணத்திற்கு ரசீது எதுவும் தரப்படுவதில்லை. இது பாதுகாப்பாற்ற நடைமுறை, மேலும் முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும். எனவே ரசீது தரும் முறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கோருகின்றனர்.