தீவிரவாதிகளுடன் தொடர்பு?- 2 மாணவர்கள் நீக்கம்
ஹூப்ளி: லக்ஷர்-இ-தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இரு கர்நாடக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், தாவணகரே மாவட்டத்தில் உள்ள கர்நாடகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆயுர்வேதிக் கல்லூரியில் ஆசிப் என்பவர் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டும், அசாதுல்லா என்பவர் 2ம் ஆண்டும் படித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஹொன்னாலி பகுதியில், கெளஸ் என்பவர் கைது அசாதுல்லாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலஸீார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது பைக் திருடியதற்காக கெளஸை சமீபத்தில் போலீஸார் கைது செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கெளஸுக்கு லஷ்கர் இ தொய்பா மற்றும் சிமி ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மேலும், அவரிடம் தென்னிந்திய மேப், சில அமெரிக்க டாலர்கள், ஒரு கத்தி ஆகியவை இருந்தது. இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது ஆசிப்பின் பெயரை அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ஆசிப்பின் விடுதி அறையை போலீஸார் சோதனையிட்டனர். அங்கு மதம் சம்பந்தமான சில புத்தகங்கள் இருந்தன. இதையடுத்து ஹூப்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிப்பும், அசதுல்லாவும் சேர்ந்து ஹூப்ளி விமான நிலையத்தைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹூப்ளி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு போலீஸார் விசாரித்தனர். அப்போது ஜனவரி 25ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் விமான நிலையம் தகர்க்கப்படும் என தங்களுக்கு மிரட்டல் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு மருத்துவ மாணவர்களையும் போலீஸார் கைது செய்தனர். ஆனால் விசாரணையில் அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை, சாதாரண பைக் திருடர்கள்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையை போலீஸார் முடித்துக் கொண்டனர்.
இருப்பினும், தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்ேதகம் எழுந்ததால், பிரச்சினை வேண்டாம் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம், இரு மாணவர்களையும் விடுதியிலிருந்து வெளியேற்றி விட்டது.