சிறுபான்மையினர் யார்?: மறுவரையறை செய்ய பாஜக கோரிக்கை
டெல்லி: சிறுபான்மையினர் யார் என்பது குறித்து மறு வரையறை செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜகவின் ேதசியக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பேசிய கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்,
சிறுபான்மையினரின் வாக்குகளை குறி வைத்து அவர்களுக்கு சலுகைகளை அள்ளித் தருவதை நிறுத்த வேண்டும். இதைத் தடுக்க பாஜக எந்த நிலைக்கும் செல்லும். வங்கிகளில் சிறுபான்மையினருக்கு என தனியாக கடன் திட்டத்தைக் கொண்டு வரவும், இயற்கை வளங்களை சிறுபான்மையினருக்கு கோட்டா மூலம் வழங்கவும் முயற்சி நடக்கிறது. இதைத் தடுப்போம்.
முதலில் சிறுபான்மையினர் யார் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும். இந்த சிறுபான்மையினர் என்ற சொல் எங்கெல்லாம் செல்லுபடியாகும் என்பதையும் வரையறுக்க வேண்டும்.
இயற்கை வளங்களை பகிர்ந்து ெகாள்வதில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை தர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பது அதிர்ச்சி தருகிறது. மதவாத பட்ஜெட் தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசு தயாராகி வருகிறது என்றார் ராஜ்நாத்.
அணு ஒப்பந்தம்-பாஜக மெளனம்:
மத்திய அரசின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்த இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஏதும் பேசப்படவில்லை.
விவசாயிகளின் பிரச்சனை, பொருளாதாரக் கொள்கை, தீவிரவாதம், சிறுபான்மையினருக்கு சலுகைகள், வட கிழக்கு மாநில பிரச்சனைகள், பெண்கள் இட ஒதுக்கீடு, இந்துக்களை மத்திய அரசு புறக்கணித்து வருவது, பிரதமரின் சீனப் பயணம் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட இந்த பாஜக கூட்டத்தில் அமெரிக்கா குறித்தோ, அணு ஒப்பந்தம் குறித்தோ ஏதும் பேசப்படவில்லை.
இந்த அணு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு வெளியே பாஜக மிகக் கடுமையாக குறை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.