கல்யாணம் முடிந்த 3 மணி நேரத்தில் இறந்த புது மாப்பிள்ளை
சென்னை: திருமணம் முடிந்த மூன்றே மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவர் போர்ட் கார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார்.
இவருக்கும் ரேணுகா (26) என்பவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. அங்குள்ள அகோபில மடத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
காலை 7 மணிக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் மகேஸ்வரும், ரேணுகாவும், தம்பதி சமேதாரக திருப்பதி கோவிலில் சென்று வழிபட்டனர். அதன் பின்னர் இருவரும் உறவினர்களுடன் வெளியே வந்தனர்.
அப்போது வராகசாமி கோவில் அருகே வந்தபோது திடீரென மகேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அனைவரும் பதறிப் போயினர். கல்யாண களைப்பில் அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என நினைத்தனர்.
உடனடியாக கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், மகேஸ்வரனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டதும் ரேணுகா மற்றும் மண வீட்டார் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
மகேஸ்வரின் உடலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ரேணுகா கதறி அழுதார்.
திருமணத்திற்காக வந்த அனைவரும் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்துடன் மகேஸ்வரனின் உடலுடன் சென்னை திரும்பினர்.