காவிரி: நடுவர் மன்ற இறுதி விளக்கத்தை ஏற்க வேண்டும்-மத்திய அரசு
டெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு குறித்த இறுதித் தீர்ப்பில் கர்நாடகம் தமிழகம், உள்ளிட்ட மாநிலங்கள் சில சந்தேகங்களை எழுப்பி அதற்கான விளக்கத்தை நடுவர் மன்றத்திடம் கோரியுள்ளன. நடுவர் மன்றம் தரவுள்ள விளக்கத்துக்காக மத்திய அரசு காத்துக் கொண்டுள்ளது. அந்த விளக்கத்தை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் சமூக பிரச்சினைகள் தொடர்பான 8வது மாநாடு இன்று நடந்தது. இதில், சைபுதீன் சோஸ் பேசுகையில்,
2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்ட பின்னர் இந்த இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் இறுதித் தீர்ப்பு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் விளக்கம் கேட்டுள்ளன. இந்த இறுதி விளக்க அறிக்கைக்காக மத்திய அரசு காத்துள்ளது.
இறுதி விளக்க அறிக்கை வெளியான பின்னர் அனைத்து தரப்பினரும் அதை இறுதித் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த இறுதித் தீர்ப்புக்கு தேசம் கட்டுப்பட்டாக வேண்டும் என்றார் சோஸ்.