அதிமுகவுடன் கூட்டணி-பாஜக தேசிய செயற்குழுவில் ஆலோசனை
டெல்லி: அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து டெல்லியில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசியக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் பாஜக தமிழகத்தில் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது பற்றிய பேச்சு வார்த்தை தற்போது துவங்கி உள்ளது. இதுகுறித்து இறுதி
முடிவு தேர்தல் நேரத்தில் தான் எடுக்கப்படும்.
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்து நிலவுவதால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து இங்கு நடந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் அத்வானியை பிரதமர் வேட்பாளராக
ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடனேயே பாஜக கூட்டணி வைத்துக் கொள்ளும்.
கச்சத்தீவில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் கச்சத்தீவு விஷயத்தில் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீறி வருகிறது.
ஆகவே இரு நாடுகளுக்கு இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, கச்சத் தீவை மீட்டு மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறது.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால், இப்போதைய சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தி விட்டு, முழுமையாக அந்த திட்டத்தை ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வருகிற மார்ச் 9ம் தேதி பிரதமர் வேட்பாளர் சென்னை வருகிறார். பாஜக சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.