செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கில் பிப். 6ல் தீர்ப்பு
சென்னை: பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இணையதளம் மூலம் விற்பனை செய்த செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கில் பிப்ரவரி 6ம்தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த செக்ஸ் டாக்டர் பிரகாஷ் ஏராளமான பெண்களை மயக்கி நிர்வாண படம் எடுத்து இணைய தளம் மூலமாக வெளிநாடுகளில் விற்பனை செய்தார்.
இதையடுத்து அவரையும்,அவரது 3 கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்தனர். பிரகாஷ் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
அவஅவர் மீதான வழக்கு சென்னை விரைவு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இவ்வழக்கில் பலமுறை ஜாமீன் கோரியும் பிரகாஷுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அதேசமயம், அவரது கூட்டாளிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில், வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் குமரேசன், கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த பிரகாஷ் மீதான வழக்கில் விசாரணை முடிந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வரும் பிப்ரவரி 6ம் தேதி விரைவு நீதிமன்றத்தில் கூறப்பட இருக்கிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயபால், பிரகாஷ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.