இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க திருமாவளவன் கோரிக்கை
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்திய திருமாவளவன், புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றார். இதற்கு காங்கிரஸ் மற்றும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திருமாவளவனை கைது செய்யக் கோரி சட்டசபையில் வெளிநடப்பு செய்து தனது எதிர்ப்பைக் காட்டியது காங்கிரஸ்.
காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தி வரும் திமுக அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதையடுத்து இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய உயர் மட்டக் கூட்டத்தில் புலிகளை ஆதரிப்போர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி அரசுக்கு தர்ம சங்கடத்தைத் தர வேண்டாம் எனவும் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் பிரச்சனைக்கு காரண கர்த்தாவான திருமாவளவன் மீண்டும் தனது நிலையை உறுதிபடுத்தியுள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
புலிகள் மீதான தடையை நீக்கி, எல்டிடிஈ அமைப்பை விடுதலைப் போராட்ட அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்று நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்துரிமை, ஜனநாயக உரிமை. அதில் தவறேதும் இல்லை.
இது தான் எங்கள் அமைப்பின் நிலை. அதற்காக எங்களை சட்டப்படி தண்டிக்க ஆட்சியாளர்கள் கருதினால் அதற்கும் நாங்கள் தயார்.
சர்வதேச கடல் பகுதியில் கண்ணி வெடிகளைப் போட்டு வைத்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதையே தடுக்க முயல்கிறது இலங்கை கடற்படை. இந்திய மீனவர்களைக் காக்க இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும்.
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கட்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்கள் கட்சத் தீவில் ஓய்வெடுக்கவும், வலைகளை காய வைக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தீவுப் பக்கமே மீனவர்களை வர விடாமல் தடுத்து சுட்டு, தாக்கி, கொன்று வருகிறது இலங்கை.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசின் உதவித் தொகை பெற 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலை உரிமையை தடுக்கும் செயல். இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 5ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார் திருமாவளவன்.