ராமர் பாலம்: மத்திய அரசுக்கு மேலும் அவகாசம்
டெல்லி: ராமர் பால விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தனது நிலையை தெரிவிக்க மேலும் நான்கு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பன்சால் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.மோகன், இந்த விவகாரத்தில் அரசு தனது பதிலை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் தேவை என்று வாய்தா கேட்டார்.
இதையடுத்து இந்தத் திட்டம் தொடர்பாக அறிக்கை பதிலறிக்கையும், ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆய்வு ஏதும் நடத்தப்பட்டதா என்பது குறித்து இன்னொரு பதில் அறிக்கையும் என இரு பதில் அறிக்கைகளை நான்கு வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இரு பதில் அறிக்கைகளும் மார்ச் முதல் வாரத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.