தலைமைச் செயலகம் முன் மாணவர்கள் திடீர் போராட்டம்
சென்னை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பிளஸ் டூவில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் அவர்களது உயர் கல்விக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து அச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்று தலைமைச் செயலகம் முன்பு நடத்தினர்.
இன்று காலை சென்னை தலைமைச் செயலகம் முன்பு அனைத்துக் கல்லூரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் சட்டசபை வளாகத்துக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க சட்ட சபையின் நுழைவு வாயில் கதவுகள் உடனடியாக மூடப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டன்.
அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மாணவர்கள் எதிர்த்து கோஷமிட்டனர்.
அப்போது சில மாணவர்கள், போக்குவரத்து சிக்னல் விளக்குக் கம்பத்தில் ஏறிக் கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பதட்டம் அதிகரித்தது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். பின்னர் அதிரடிப் படை போலீசார் கொண்டு வரப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக வேன்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த மாணவர்களை கோட்டை போலீஸார் கைது செய்து கங்கா காவேரி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக சட்டசபை வளாகத்திற்குள் பலத்த சோதனைக்கு பின்னரே அரசியல் கட்சி பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக சென்னை அண்ணா சாலையில் நேற்று இரவு மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் மணிக்கணக்கில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மாணவர்களுக்கு கருணாநிதி ஆதரவு:
இந் நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி,
அரசின் உதவித் தொகை பெற தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு ஏற்புடையதல்ல. மத்திய அரசு இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளேன்.
மத்திய அரசு இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டாலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு அவர்கள் எடுத்த மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் என்றார்.