சென்னை-எச்சில் துப்பினால் ரூ50 அபராதம்!
சென்னை: சென்னையில் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ, குப்பையை வீசினாலோ அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
வீடுகளின் வெளிப் பகுதிகளை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தெடார்பான தீர்மானம் இன்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரோட்டில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், பொதுக் குழாயில் நின்று குளித்தல், நடுரோட்டில் குளியல் போடுதல், குப்பையை வீசுதல் ஆகிய குற்றங்களுக்கு ரூ. 50 அபராதம் விதிக்கப்படவுள்ளது.
சாலைகளில் குப்பையை எரிப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது வீட்டின் வெளிப் பகுதியை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பான்பராக் போன்ற வஸ்துகளை மென்று சாலைகளை 'ரத்தக் களறியாக்கி' (ரத்தக் கலராக்கி) வைப்போருக்கு இந்த தண்டனை மிக மிக அவசியமான ஒன்று தான்.
ஆனால், பொதுக் கழிப்பிடங்களை முதலில் மாநகராட்சி சுத்தமாக வைத்தால் தான் சிறுநீர் கழிக்க மக்கள் உள்ளே போவார்கள். கழிப்பிடத்தின் வெளிப்பகுதி உள் பகுதியை விட 'சுத்தமாக' இருந்தால் மக்கள் எப்படி உள்ளே காலடி வைப்பார்கள் என்பதை மாநகராட்சி யோசிக்க வேண்டும்.
மேலும் சென்னையில் பொதுமான அளவுக்கு பொதுக் கழிப்பிடங்கள் உள்ளனவா என்பதையும், அந்தக் கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி உள்ளதா என்பதையும் மாநகாட்சி பார்க்க வேண்டும்.
'பாட்டமே' இல்லாத பக்கெட், எல்லா பக்கமும் லீக் ஆகாத குவளைகள் அற்ற கழிப்பிடங்களை மாநகராட்சி அமைத்துத் தந்தால் பொது இடங்களை நிச்சயமாக சுத்தமாக வைக்க முடியும்.