புளோரிடா வாக்கெடுப்பில் ஹில்லாரி வெற்றி
வாஷிங்டன்: புளோரிடா மாகாணத்தில் நடந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை வாக்கெடுப்பில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மீண்டும் அவரது கை ஓங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய முதன்மை வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹில்லாரி கிளிண்டனுக்கும், பாரக் ஓபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.
ஹில்லாரி இதுவரை நியூ ஹாம்ப்ஷயர், நிவேதா ஆகியவற்றில் வெற்றி பெற்றிருந்தார். அயோவா மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் ஓபாமா வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சியில் ஜான் மெக்கெய்ன் மற்றும் மிட் ரோம்னிக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருவரும் தலா 3 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சிக்கான முதன்மை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஹில்லாரி கிளிண்டன் அபார வெற்றி பெற்றார்.
ஹில்லாரிக்கு 50 சதவீத வாக்குகளும், ஓபாமாவுக்கு 33 சதவீத வாக்குகளும், ஜான் எட்வர்ட்ஸுக்கு 14 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
ஹில்லாரிக்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளை அமெரிக்கர்களும், வெளிநாட்டு அமெரிக்கர்களும்தான்.
இதற்கிடையே, தொடர்ந்து 3வது இடத்திலேயே இருந்து வரும் ஜனநாயகக் கட்சியின் ஜான் எட்வர்ட்ஸ் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளார். நியூ ஆர்லியான்ஸில் நடைபெறவுள்ள பிரசாரத்தின்போது இந்த முடிவை அவர் அறிவிக்கவுள்ளார்.
எட்வர்ட்ஸுக்கு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை வெள்ளை அமெரிக்கர்கள் மத்தியில்தான் ஆதரவு அதிகம் உள்ளது. எனவே அவர் போட்டியிலிருந்து விலகினால் அது ஓபாமாவுக்கு சாதகமாகலாம் என கருதப்படுகிறது.
புளோரிடாவில் ஜான் மெக்கெய்ன் அபார வெற்றி:
இதற்கிடையே புளோரிடா மாகாண குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் ஜான் மெக்கெய்ன் அபார வெற்றி பெற்றார். அவருக்கு 36 சதவீத வாக்குகளும், ரோம்னிக்கு 31 சதவீத வாக்குகளும், ரூடி ஜியுலியானிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து ஜான் மெக்கெய்னுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ரூடி ஜூலியானி தெரிவித்துள்ளார்.
அடுத்து பிப்ரவரி 5ம் தேதி 22 மாகாணங்களுக்கு ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. சூப்பர் செவ்வாய் எனப்படும் இந்த நாளில் நடைபெறும் வாக்கெடுப்பின் இறுதியில் இருகட்சிகளின் சார்பிலும் அடுத்து யார் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.