தமிழகத்தின் காவிரி வழக்கு: கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் புறம்பாக காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள தடுப்பணைத் திட்டம் மற்றும் பிற நீர்ப்பாசனத் திட்டங்களுக்குத் தடை கோரி தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு முயலுகிறது. மேலும், பல்வேறு புதிய நீர்ப்பாசனத் திட்டங்களையும் அது மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைத் தடுக்க அது முயலுகிறது.
கர்நாடக அரசின் இந்த செயல், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு புறம்பானது, சட்ட விரோதமானது. எனவே இந்தத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகத்திற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் கர்நாடகத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள சிறிய நீர்ப்பாசன குளங்களை தூர் வாரவும் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழகம் கோரியிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.