கிட்னி: டாக்டருக்கு 'இன்டர்போல்' வலை
டெல்லி: நாட்டையே உலுக்கியுள்ள குர்கான் சிறுநீரக மோசடியில் தொடர்புடைய டாக்டர் அமீத் குமாரைப் பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
டெல்லி அருகே உள்ள குர்கானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் சிறுநீரகங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, வெளிநாட்டினருக்கு பல லட்சம் அளவுக்கு விற்று பெரும் மோசடியில் ஈடுபட்டு சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார் டாக்டர் அமீத்குமார்.
சிறுநீரக மோசடி மூலம் கோடிக்கணக்கில் அவர் சம்பாதித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக அமீத்குமாரின் கூட்டாளிகள் சிலர் சிக்கியுள்ளனர். அமீத்குமார் தப்பி விட்டார்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ கையில் எடுத்துள்ளது. வெளிநாட்டுக்குத் தப்பி விட்ட அமீத் குமாரைப் பிடிக்க இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளது.
இதுதொடர்பாக குர்கான் போலீஸார், சிபிஐக்கு கடிதம் எழுதினர். இன்டர்போல் உதவியை நாடி அமீத்குமாரைப் பிடிக்க உதவ வேண்டும் என குர்கான் போலீஸார் சிபிஐக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அமீத்குமாரைப் பிடிக்க சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸைப் பிறப்பிக்குமாறு சிபிஐ, இன்டர்போலுக்குக் கோரிக்ைக விடுத்தது.
அதை ஏற்ற இன்டர்போல் தற்போது அமீத்குமாரைப் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸை பிறப்பித்துள்ளது. அமீத்குமார் தவிர அவரது சகோதரர் டாக்டர் ஜீவன் குமாருக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இரு சகோதரர்களின் புகைப்படங்களும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்காவது தென்பட்டால் பிடிப்பதற்கு வசதியாக அனைத்து மாநில காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.