107 தமிழக போலீசாருக்கு எய்ட்ஸ்-சிறைகளிலும் பரவும் எச்ஐவி
கோவை: தமிழக காவல்துறையில் 107 போலீசாருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதே போல தமிழக சிறைகளில் கைதிகள் மத்தியிலும் மிக வேகமாக எச்.ஐ.வி. பாதிப்பு பரவி வருகிறது.
காவல்துறையில் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரகசியமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசாருக்கு எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒய்வு பெற்ற எஸ்.பி. சத்தியநாராயணன் இந்த முகாம்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.
கோவையில் நடத்தப்பட்ட முகாமில் சத்தியநாராயணன் பேசுகையில், தமிழக காவல்துறையில் 107 பேருக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தமிழக சிறைகளிலும் கைதிகளிடையே நடக்கும் தவறான உடலுறவுகளால் (ஒரு பால் உடலுறவு) அங்கும் எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரித்து வருகிறதாம். தமிழகத்தில் உள்ள எட்டு மத்திய சிறைகளில் 25 சதவீதம் அளவுக்கு கைதிகளை எச்.ஐ.வி. வைரஸ் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, கைதிகளுக்கு காண்டம் வழங்கும் வகையில் சிறை விதிகளை மாற்றியமைக்க முடியுமா என யோசிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இந்த முறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், காண்டம் வழங்கினால் அது சிறைகளில் தவறான உடலுறவை ஊக்கப்படுத்துவது போல ஆகிவிடும் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.