3213 கி.மீட்டர் நெடுஞ்சாலைகள் 4 வழி சாலைகளாகிறது
சென்னை: தமிழகத்தில் உள்ள 3213 கிலோ மீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக அகலமாக்கப்படும் என்று மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் எம்.பி.சாமிநாதன் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரன் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழகத்தில் மொத்தம் 4480 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் இருக்கிறது. அதில் 3213 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் நான்கு வழிப் பாதைகளாக மேம்படுத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்தப் பணியை மேற்கொள்ளும்.
இதில் சில 6 வழிப்பாதைகளாக மாற்றப்பட உள்ளது. மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் இரு வழிப் பாதை நான்கு வழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது.
இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும் என்றார்.