திட்டமிட்ட செயல்-ஜெ மீது கருணாநிதி தாக்கு
சென்னை: சட்டசபையில் இன்று நடந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா நிதியமைச்சர் அன்பழகன் குறித்து பேசிய பேச்சு பெரும் அமளியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா பேச்சுக்கு அமைச்சர்கள், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவினர் பெரும் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
இங்கு நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல். ஜனநாயகத்தில் அதிமுகவுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தான் அவர்களது செயல் காட்டுகிறது.
ஜனநாயகத்தில் தீராத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்பதால் தான் நாம் அமைதியாக இருந்தோம். அரசை குறைகூற எதிர்க் கட்சிக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டப் பேரவையை முடக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட செயல்களை அரங்கேற்றக் கூடாது.
ஆனால், அவர்கள் திட்டம் போட்டு வந்தார்கள். நமது அரசு ஜனநாயக விரோதமானது என அதிமுக கூறுகிறது. சட்டசபையின் கோப்புகளைப் பார்த்தாலே தெரியும், யார் ஜனநாயக விரோதிகள், யார் ஜனநாயகவாதிகள் என்பது.
ஆளுநர் உரை மீது பேச திமுகவைச் சேர்ந்த 7 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் மொத்தமே 41 நிமிடங்கள் தான் பேசினர்.
ஆனால், அதிமுக தரப்பில் 10 உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தரப்பட்டது. அவர்கள் மொத்தம் மூன்றரை மணி நேரம் பேசியுள்ளனர்.
நாங்கள் சுயமரியாதைக் காரர்கள். ஆனாலும் பேராசியர் அன்பழகனைப் பார்த்து அவர்கள் தவறாகப் பேசியபோதும் அமைதி காத்திருக்கிறோம். காரணம், ஜனநாயகத்தை நாங்கள் மதிப்பது தான். ஆட்சியில் இருப்பதால் பொறுப்புடன் இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். எதிர்தரப்பும் அப்படியே நடந்து கொள்வதே நல்லது என்றார் கருணாநிதி