சிட்னி: கோவில் கட்டும் பணிக்கு எதிர்ப்பு
சிட்ன நகரின் நெல்சன் என்ற இடத்தில், கோவில் கட்ட ஸ்ரீ சுவாமிநாராயணன் கோவில் டிரஸ்ட் முடிவு செய்தது. 10 லட்சம் டாலர் மதிப்பில் இந்தக் கோவிலை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தற்போது கோவில் கட்ட உள்ளூர்க்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கோவில் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பாக்ஸ் ஹில்-நெல்சன் பிராகரஸ் சங்கத்தின் தலைவர் ஜான் ஹிக்மன் கூறுகையில், நாங்கள் இந்துக் கோவில் கட்டுவதையோ அல்லது வழிபாடு செய்வதையோ எதிர்க்கவில்லை. இதில் எந்த இனவாதமும் இல்லை. உள்நோக்கமும் இல்லை.
ஆனால் கோவில் கட்டப்படவுள்ள இடம் மிகவும் குறுகிய இடம். அங்கு குடிநீர் வசதியோ, நல்ல கழிப்பிட வசதியோ அல்லது சாலை வசதியோ இல்லை.
200 பேர் கூடும் இந்த இடத்தில், 50 கார்களை மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. இதனால் பெரும் பிரச்சினைகள் உருவாகும். இதனால்தான் கோவில் கட்டுவதை எதிர்க்கிறோம் என்றார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இஸ்லாமியப் பள்ளி ஒன்றை கட்டும் முயற்சிக்கும் இதுபோல எதிர்ப்பு கிளம்பியது. இப்போது இந்துக் கோவிலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இந்துக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.