யாகூவை வாங்குகிறது மைக்ரோசாப்ட்
சான் பிரான்சிஸ்கோ: உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான யாகூவை 44.6 பில்லியன் டாலர்களுக்கு (ரூ. 1,73,940 கோடிகள்) மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குகிறது.
உலகின் இன்னொரு மகா பெரிய இன்டர்நெட் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியால் யாகூ பின் தங்கி வரும் நிலையில் மைக்ரோசாப்ட் அதை வாங்குகிறது.
ஒவ்வொரு யாகூவின் பங்குக்கும் 31 டாலர்கள் வழங்குவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் யாகூ போர்ட் ஆப் டைரக்டர்கள் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன்மூலம் யாகூவை வாங்க பில் கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 44.6 பில்லியன் செலவு பிடிக்கும்.
சில காலமாகவே யாகூவின் பங்கு மதிப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் கூகுள் நிறுவன பங்குகள் அதிவேகத்தில் வளர்ச்சி கண்டு கொண்டுள்ளன.
யாகூவை மைக்ரோசாப்ட் வாங்கப் போவதாக செய்தி வெளியான உடனேயே யாகூவின் பங்குகளின் விலை 60 சதவீதம் அதிகரித்துவிட்டது. கூகுள் பங்குகளின் மதிப்பு 8 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
ஓராண்டுக்கு முன்பே யாகூவை வாங்க மைக்ரோசாப்ட் முயன்றது. ஆனால், அப்போது அதை யாகூ ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் யாகூ நிறுவனத் தலைவரான டெர்ரி செமல் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். மேலும் செலவைக் குறைக்க 1,000 பேரை வேலை நீக்கம் செய்யவும் யாகூ திட்டமிட்டிருந்தது.
இந் நிலையில் மைக்ரோசாப்ட் யாகூவை கைப்பற்றுகிறது.