கேபிள் துண்டிப்பு: ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பாதிப்பு
டெல்லி: எகிப்து அருகே நடுக் கடலில் இன்டர்நெட் கேபிள் துண்டிக்கப்பட்டதால், ஏற்பட்டுள்ள இணையதள இணைப்பு துண்டிப்பு, இந்தியாவில் உள்ள விமான, ரயில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளங்களை பெரும் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம், யாத்ரா ஆன்லைன் நிறுவனத்தின் இணையதளம், பிவிஆர் லிமிட்டெட் நிறுவனத்தின் இணையதளம் ஆகியவை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனவாம்.
இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட இணைய தள இணைப்புகள் சரிவர இயங்கவில்லை.
ரூ.110 கோடி இழப்பு:
இணையதள கேபிள் சரியாக இன்னும் 10 நாட்கள் ஆகும் என்பதால் பாதிப்பிலிருந்து எப்படி மீள்வது என பெரும்பாலான இணையதளங்கள், நிறுவனங்கள் கவலையில் மூழ்கியுள்ளன. கேபிள் துண்டிப்பால் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 110 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட கேபிள் வழியாக இணைப்பைப் பெற்றுக் கொண்டிருந்த நிறுவனங்கள் மாற்று கேபிள்களான எஸ்.எம்.டபிள்யூ 3 (அதாவது தென் கிழக்கு ஆசிய, மேற்கு ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் கேபிள்), பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கேபிள் மூலமாக தங்களது இணைப்புகளை திருப்பி விட்டு வருகின்றனவாம்.
இந்தியாவில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், மத்திய அரசின் மகாநகர் டெலிபோன் நிகாம் (எம்.டி.என்.எல்) ஆகிய நிறுவனங்கள் இணையதள கேபிள் துண்டிப்பால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்த கேபிள் துண்டிப்பு காரணமாக இணையதள வேகத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாம். இதனால் வழக்கமான வேகத்தில் இன்டர்நெட் இணைப்புகள் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் மூழ்கியுள்ளனர்.
இந்தியா மட்டுமல்லாமல் மேற்கு ஆசியா, எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இதன் பாதிப்பு எதிரொலித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சேவைதான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த இணையதளம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 6000 டிக்கெட் வரை விற்கப்படும். ஆனால் தற்போது 1400 முதல் 2400 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறதாம்.
எம்.டி.என்.எல். நிறுவனம், வி.எஸ்.என்.எல் மற்றும் ஆர்.காம் ஆகிய இன்டர்நெட் சேவையாளர்களிடமிருந்து இணைப்புகளைப் பெற்று வழங்குகிறது. ஆர்.காம். நிறுவனத்தின் கேபிள்தான் தற்போது கடலில் துண்டிக்கப்பட்டுள்ளது.
எம்.டி.என்.எல். நிறுவனத்திடமிருந்துதான் ரயில்வே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சேவை நடந்து வருகிறது. இதனால்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வி.எஸ்.என்.எல்லின் சேவை பாதிக்கப்படவில்லை என்பதால் ஆன்லைன் புக்கிங் சேவை ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது தனது சேவையை ஆர்.காமிலிருந்து வி.எஸ்.என்.எல்லுக்கு மாற்றி வருகிறது எம்.டி.என்.எல். இதன் காரணமாக ஓரளவு நிலைமை சீராகிக் கொண்டிருக்கிறதாம்.
இதேபோல யாத்ரா.காம் நிறுவனத்தின் ஆன்லைன் விமான புக்கிங் சேவையும் கணிசமான பாதிப்பை சந்தித்துள்ளது. ஒரு நாளைக்கு இந்த தளம் மூலம் 6500 டிக்கெட்டுகள் விற்கப்படும். ஆனால் தற்போது 5700 டிக்கெட்டுகளே விற்பனையாகிறதாம். தற்போது சிங்கப்பூரிலிருந்து தனது சேவையை தொடர யாத்ரா.காம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் நிலைமை சீராகி விடும் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.