தஸ்லிமா வீட்டுக் காவலில் இல்லை: காங். மறுப்பு
டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் கூறுகையில், தஸ்லிமா நஸ்ரின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியிருப்பதில் உண்மை இல்லை. அப்படிக் கூறுவதற்கு முன்பு அவர் உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும்.
டெல்லியில் உள்ள ரகசிய இடத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அவர் தங்குமிடம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறி விட முடியாது.
முதலில் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திற்குத்தான் தஸ்லிமா சென்றார். அவரை அங்கு 24 மணி நேரம் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாமல்தான் பாஜக அரசு டெல்லிக்கு அனுப்பி வைத்தது என்பதை முதலில் அத்வானி புரிந்து கொள்ள வேண்டும்.
அதேசமயம், இந்தியாவில் புகலிடம் அடைந்தவர்கள், இங்குள்ள மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதும் முக்கியம் என்றார் அவர்.