இலங்கை: பேருந்தில் குண்டு வெடித்து 20 பேர் பலி
இன்று காலை கண்டியில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அனுராதபுரத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
தம்புலா நகருக்கு காலை 7 மணியளவில் பேருந்து வந்தது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் நின்றபோது, பயங்கர சப்தத்துடன் பேருந்தில் குண்டு வெடித்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் புத்த துறவிகள் ஆவர். அனைவரும் மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று கொண்டிருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பிற்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று இலங்கை ராணுவம் கூறியுள்ளது. புலிகள் தரப்பில் இந்த குண்டுவெடிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.