கழிவு நீர் சுத்திகரிப்பு: சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதியை இதுவரை ஏற்படுத்தாத 70 சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சாய பட்டறைகளும், 100க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
சாயப் பட்டறைகளுடன் தொடர்புடைய பிளீச்சிங் பட்டறைகள் 100க்கும் மேல் உள்ளது. இந்த சாயப்பட்டைறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால் ஆகியவை மாசுபட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீரும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதால் அந்த நீரை உபயோகிக்கும் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளும் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட விவசாயிகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதன் பின்னர் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் ஆலைகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் ஆய்வில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பிளீச்சிங் மற்றும் சாயப் பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ.பிளாண்ட் அமைக்காமல் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த குழுவினர் கொடுத்த அறிக்கையை வைத்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து சீல் வைப்பதுடன், மின் இணைப்பை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரோடு பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றிய 70 பிளீச்சிங் பட்டறைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்க உள்ளோம்.
சாயப்பட்டறைகளில் ஆர்.ஓ.பிளாண்ட் அமைக்க கோரியும், கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் கண்டுகொள்வதே கிடையாது என்றார்.