சேது திட்டம்: மாற்றுப் பாதையில் நிறைவேற்ற ராமதாஸ் ஆதரவு
சென்னை: ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றால், மாற்றுப் பாதை இருக்கிறது என்றால் அந்தப் பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்றுவதற்காக தற்போது ராமர் பாலத்தை இடித்துவிட்டு நிறை வேற்றுவதற்கு பதிலாக மாற்று பாதை இருந்தால் அதனை மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
அவ்வாறு செய்வதன் மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வதில் உள்ள இடையூறுகள் நீங்கி பிரச்சனைகள் தீருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
சேது சமுத்திரம் நிறைவேற்றப்பட வேண்டும். அது தாமதப்படுத்தப்படக் கூடாது. எப்படியும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தும் ஆகும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் முதலமைச்சருக்கு நேரடியாக தொடர்பு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், சில அதிகாரிகள் இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம். எனவே, இந்த பிரச்சனை குறித்து நீதிவிசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.
சட்டப்பேரவையில் சபை நாகரீகம் குறைந்து வருகிறது. தனிப்பட்ட நபர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி தாக்குதல் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
மக்கள் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்வது அண்ணா மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே, டாஸ்மாக் கடைகளை அரசு படிப்படியாக மூட வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளை ஒட்டிய இடங்களில் தனியார் பங்கேற்புடன் வீடுகள் கட்டும் திட்டம் தேவையற்றது. இது தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி பெறவும், வீடுகள் மற்றும் நிலத்தின் விலை உயரவும் வழிவகுக்கும்.
வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இருக்கும் போது அரசு ஏன் தனியாரை ஈடுபடுத்த வேண்டும். இத்திட்டம் குறித்து தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.