ராஜ் தாக்கரேவுக்கு சோம்நாத் 'கொட்டு'
மும்பை: இந்தியாவின் எந்த பகுதியிலும் தங்கவும், வேலை பார்க்கவும் இந்தியர்களுக்கு முழு உரிமை உண்டு. இதை எதிர்ப்பது சட்டவிரோதமானது, அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
மும்பையில், 14வது அகில இந்திய அனைத்துக் கட்சி கொறடாக்கள் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள மும்பை வந்தார் சோம்நாத் சாட்டர்ஜி.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ராஜ் தாக்கரேவின் வட இந்திய எதிர்ப்புப் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சாட்டர்ஜி பதிலளிக்கையில், இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவரும், நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும், வேலை பார்க்கவும் உரிமை உள்ளது. இதை எதிர்ப்பது சட்டவிரோதமானது, அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது.
மும்பையில் விரைவில் அமைதி திரும்பும், நல்லெண்ணம் மலரும் என்று நம்புகிறேன் என்றார் சோம்நாத்.
மும்பையில் மராத்தி மக்கள் விரைவில் சிறுபான்மையினர் ஆகி விடுவார்கள் என்று ஒரு கருத்து நிலவுவது குறித்து செய்தியாளர்கள் சோம்நாத்திடம் கேட்டபோது, அதெல்லாம் கிடையாது. இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்த மண்ணின் மைந்தர்கள்தான். கொல்கத்தாவில் கூட பாதிப்பேர் வங்காளி அல்லாதவர்கள்தான் என்றார்.
மும்பையில் கடந்த சில நாட்களாக அரசியலின் தரம் வெகுவாக தாழ்ந்து போய் விட்டதே என்று செய்தியாளர்கள் கூறியபோது, அதனால்தான் நான் அரசியலை விட்டு விட்டேன் என்றார் சிரித்துக் கொண்டே சோம்நாத்.