ராஜ் தாக்கரே கட்சியினர் 200 பேர் சிவசேனையில் இணைந்தனர்
மும்பை: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியிலிருந்து 200 பேர் இன்று அக்கட்சியிலிருந்து விலகி பால்தாக்கரேவின் சிவசேனையில் இணைந்தனர்.
ராஜ் தாக்கரே வட இந்தியர்களைத் தாக்கிய பேசியதால் வெறுப்படைந்து சிவசேனைக்கு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சிவசேனை செயல்தலைவரும், பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் இவர்கள் சிவசேனையில் இணைந்தனர்.
பந்த்ராவில் உள்ள பால்தாக்கரேவின் வீட்டில் இந்த இணைப்பு நடந்தது.
தற்போது நடந்து வரும் சம்பவங்கள் சமாஜ்வாடிக் கட்சிக்கும், ராஜ் தாக்கரேவின் கட்சிக்கும் இடையிலான மோதல். இது மகாராஷ்டிர மக்களுக்கும், வட இந்தியர்களுக்கும் இடையிலானது அல்ல என்று சிவசேனை கருத்து தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இப்போதுதான் சிவசேனை முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவேசனையிலிருந்து பிரிந்துதான் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியைத் தொடங்கினார் ராஜ் தாக்கரே. அவருக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே பெரும் பனிப் போர் மூண்டதால்தான் சிவசேனை உடைந்தது என்பது நினைவிருக்கலாம்.