ஆள் குறைப்பில் டிசிஎஸ் - 400 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது
{image-Tcs+Logo250_06022008.jpg tamil.oneindia.com}டெல்லி: முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 400 ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் ஐபிஎம், விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக ஊழியர்களின் சம்பளத்திலும், ஊக்கத் தொகையிலும் கையை வைத்தன.
தற்போது ஆள் குறைப்பில் அவை இறங்கியுள்ளன. 2 நாட்களுக்கு முன்னர் ஐபிஎம்-ல் வேலைபார்க்கும் 700 ஊழியர்களை ராஜினமா செய்யுமாறு அந்த நிறுவனம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனம் 400 ஊழியர்களை விலக உத்தரவிட்டது.
அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, பொருளாதார தடுமாற்றம் ஆகியவற்றால்தான் ஆள் குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பில் இந்திய ஐடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
இது ஆள் குறைப்பு இல்லை என்று டிசிஎஸ் தெரிவிக்கிறது. திறமை மற்றும் வேலை பார்க்கும் தன்மையைப் பொறுத்து ஆண்டுக்கு 500 பேர் விலகியபடிதான் இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.
ஐடி நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திலேயே போய் விடுகிறதாம். இதனால் இந்த நடவடிக்கையை ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.