காதலர் தினம் - ராம.கோபாலன் எதிர்ப்பு
சென்னை: காதலர் தினம் லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு வியாபாரிகளால் நடத்தப்படும் கலாச்சார சீரழிவு. எனவே காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு நாடு முழுவதும் மிருகங்களும் கண்டு வெட்கப்படக் கூடிய செக்ஸ் வக்கிரங்கள் நடந்தன. இது ஒரே நாளில் நடந்துவிட்ட நிகழ்ச்சி கிடையாது. டிவி, சினிமா மற்றும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கலாச்சார அழிப்பு வியாபாரிகளின் கூட்டு முயற்சியாகும்.
திட்டமிட்ட ரீதியில் இவர்கள் போட்ட விதை குடி, கும்மாளம், குத்தாட்டம் போன்ற ஒழுக்க சிதைவு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.
சென்னையில் பிரபல ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தின் மீது மேடை அமைத்து ஆடுவதற்கு அழைப்பு விடுத்ததை போல மது, மங்கை, கூத்தடித்தல் போன்ற நிகழ்ச்சிகளை இந்த காதலர் தினத்தன்று நடத்தாமல் இருக்க அரசு தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படித்த இளைஞர்கள் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதால் மேடை சரிந்து உயிர்ச்சேதம், காயமடைந்தது அனைவரும் நாம் அறிந்ததே. இந்த கலாச்சார சீரழிவை, காட்டுமிராண்டித்தனத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தவிர எவரும் கண்டிக்கவில்லை.
தொழில் வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி போன்ற எத்தனையோ துறைகளில் ஒரு நாடு முன்னணி வகித்தாலும் அந்த நாட்டில் ஒழுக்கம் இல்லை என்றால் அந்நாடு வீழ்ச்சியுறும் என்பதற்கு பல நாடுகள் எடுத்துக்காட்டு.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுதந்திரம் கொடுப்பதாக கூறி கொண்டு அவர்கள் வரம்பு மீறுவதை அனுமதிக்கக் கூடாது. காதலர் தினத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். புத்தாண்டை போல் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.