சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம்: கேரள அரசு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பருவ வயதுப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகை ஜெயமாலாவால் புதிய சர்ச்சை எழுந்தது. 20 வருடங்களுக்கு முன்பு தான் அய்யப்பன் கோவிலுக்குப் போனதாகவும், அப்போது கூட்ட நெரிசலில் தான் சன்னிதானத்திற்குள் தள்ளப்பட்டதாகவும், சாமி சிலையைத் தொட்டு தான் வணங்கியதாகவும் ஜெயமாலா கூறவே பெரும் பரபரப்பு எழுந்தது.
ஜெயமாலாவுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பிரிவினரும், பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒரு பிரிவும் வரிந்து கட்டிக் கொண்டு கடும் விவாதத்தில் இறங்கியது.
இந்த நிலையில் கேரள அரசும், சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில் அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
2 வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இந்தப் பதில் மனுவில், அனைத்து வயதுப் பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களிடையே பாரபட்சம், பாகுபாடு காட்டுவதை அரசு விரும்பவில்லை.
பெண்கள் கோவிலுக்குச் சென்று வணங்குவதை கேரள அரசு எதிர்க்கவில்லை. அதேசமயம், கோவிலின் தனித்தன்மை மற்றும் அடிப்படை வசதிகள், இருப்பிடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
கோவிலில் பெண்கள் வழிபடுவதை கேரள அரசு ஆதரிக்கிறது. அதை எதிர்க்கவில்லை என்றார் அவர்.
அரசின் இந்த பதில் மனு கேரளாவில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. சபரிமலை கோவில் மூத்த தந்திரியான கண்டரரு மகேஷ்வரரு, அரசின் பதில் மனுவைக் கண்டித்துள்ளார். தற்போதுள்ள ஆச்சார அனுஷ்டானங்கள் அப்படியே தொடருவதுதான் நல்லது. இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய அரசு அதிலிருந்து விலகுவது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பில்தான் இந்த சர்ச்சை எப்படி முடிவுக்கு வரும் என்பது தெரிய வரும்.